மதுரை :மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கேள்விக்குறியாக்கும் வகையில், மதுரையில் நடைபெற்ற திருவிழாவின்போது இருவருக்கு சரமாரியாகக் கத்திக்குத்து, ஒருவர் இறந்த நிலையில் ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
கத்திக்குத்து நடைபெற்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவர்களின் வீடியோ வைரல்.
மதுரை சித்திரை திருவிழா, நடைபெற்ற பகுதியில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை.மற்றொருவர் படுகாயங்களுடன் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை.
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இது முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கடந்த வருடம் சித்திரை திருவிழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் திருவிழாவின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து நேற்றைய தினமே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், நிகழ்ச்சி நடைபெறக்கூடிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை ( 28) .நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் அயர்ன் கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாகக் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தாக்கினார்கள்.படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் சோனை என்பவர் இறந்தார். கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். எதற்காக இந்தச் சம்பவம் நடந்தது? கொலையாளிகள் யார்? என்பது குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

