
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதியும், 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25ம் தேதியும், 7ம் கட்ட இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே கடந்த முறையைவிட இந்த முறை 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். அதற்கு ஏற்றார் போலக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் 300 முதல் 370 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறி வருகின்றனர். இதனால் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
கடந்த 2 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த இம்முறை காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து வலுவான இண்டியா கூட்டணியை அமைத்து மக்களவை தேர்தலைச் சந்தித்துள்ளன. கருத்துக் கணிப்பு தொடர்பாக இண்டியா கூட்டணி கூறுகையில் கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என விமர்சித்து வருகின்றனர். இந்த இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்றும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என அடித்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் 543 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது.இதில் பாஜக முதலில்முன்னிலையில் உள்ளது . காலை 11 மணியளவில் முன்னணி நிலவரங்களுடன், அடுத்து மத்தியில் ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது உறுதியாகி விடும். 3வது முறையாகப் பாஜக வெற்றி ஹாட்ரிக் சாதனை படைப்பார்களா? அல்லது இண்டியா கூட்டணி பெருபான்மையான இடங்களில் வெற்றி ஆட்சியமைக்குமா? என்பது தெரியவரும்.




