காரைக்காலில் புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவை முன்னிட்டு புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் தேசிய கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில், கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.
அந்த நாள் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது.
இதில் புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் தேசிய கொடியேற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து காவல்துறையினர், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று அணிவகுப்பு நடைபெற்றது.
புதுச்சேரி விடுதலை நாள் விழா முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அமைச்சர் திருமுருகன், ஆட்சியர் ரவி பிரகாஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



