
பாபநாசம் அருகே அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்திக் கரும்பு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாபு இன்று பாபநாசம் தாலுக்கா பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பட்டவர்த்தி ஊராட்சியில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடிச் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 504-நாட்களாக போராடி வரும் கரும்பு விவசாயிகள் அதிமுக வேட்பாளர் பாபு வாக்குச் சேகரித்துச் சென்ற வாகனத்தைத் திடீரென நிறுத்தித் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாழ்வாதாரத்தை இழந்து சுமார் 504-நாட்களுக்கு மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது போராட்டத்திற்கு இதுவரையும் யாரும் வரவும் இல்லை, இன்று வரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லையெனக் கூறி வேட்பாளர் பாபுவின் வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அதிமுக வேட்பாளர் பாபு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி வந்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, தேர்தலுக்குப் பிறகு முடிவு எட்டப்படும் எனக் கூறி, விவசாயிகளைச் சமாதானம் செய்ததை அடுத்து கரும்பு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. ஏற்கனவே இந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக வேட்பாளர்களை மறித்துத் தங்களது ஆதங்கங்களை கரும்பு விவசாயிகள் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


