
மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாமல் அலைமோதிய நிலையில் பொதுமக்கள் கூச்சலிட்டதால் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சமயபுரம் என்னும் பகுதி உள்ளது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியை ஒட்டிச் சமயபுரம் பகுதி அமைந்துள்ளது. நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானை, மான் மற்றும் பிற வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் நெல்லி மலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிச் சமயபுரம் சாலையைக் கடந்து குடியிருப்புகள் வழியாகக் கல்லார் வனப்பகுதிக்குள் செல்லும்.
அப்போது வழியில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளைபொருள்களை நாசம் செய்து விட்டுக் கல்லாறு ஆற்றில் தாகம் தீரத் தண்ணீரை குடித்த பின்னர் மீண்டும் குடியிருப்புகள் வழியாகச் சமயபுரம் சாலையைக் கடந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்று மறைவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு நெல்லி மலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சமயபுரம் சாலையைக் கடந்து குடியிருப்புக்குள் புகுந்தது.
திடீரெனக் காட்டு யானையைக் கண்டதும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் யானையை உள்ளே போ உள்ளே போ என்று சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாததால் காட்டு யானை குடியிருப்புகளுக்குள் அங்குமிங்கும் அலைந்து திரிந்த பின்னர் பிளிறிக்கொண்டே மீண்டும் சமயபுரம் சாலையைக் கடந்து நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
தற்போது கோடைகால சுட்டரிக்கும் வெயிலில் காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் இடம் பெயர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. நெல்லிமலை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்த இந்த ஒற்றைக் காட்டு யானை நெல்லிமலை வனப்பகுதிக்கு புதிதாக வந்துள்ளதால் அந்த ஒற்றை காட்டு யானைக்குச் சமயபுரம் சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாமல் தவித்திருக்கலாமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

