
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதிவரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.
எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இதற்காகப் பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரெயிலில் இடம் கிடைக்காமல் மக்கள் ஏசி பெட்டிகளைக் கபளீகரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
பீகாரில் உள்ள மதுபனி ரெயில் நிலையத்தில் நேற்று, மகா கும்பமேளா புறப்பட்ட பக்தர்கள் சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.
ஆனால் ரெயிலில் ஏசி பெட்டிகள் உட்பட கூட்டத்தால் நிரம்பி வழிந்த நிலையில் பலருக்கு நிற்கக்கூட இடம்கிடைக்கவில்லை.
பெட்டிகளின் கதவுகளையும் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், ஏசி பெட்டிகள்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
கல் வீச்சு காரணமாக ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தன. இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.
தொடர்ந்து ரெயிலில் அமர்ந்திருந்தவர்களுக்கும் பிளாட்பாரத்தில் நின்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. இதனால் அங்குப் பதட்டமான சூழல் நிலவியது.
நிலைமையைப் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்குப் பின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
