
பாட்னா; ஹரியானா தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., 3வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் வெற்றியைப் பா.ஜ., மற்றும் அதன் தொண்டர்கள் கொண்டாடி வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறி வருகின்றன.
இந்நிலையில், ஹரியானா தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார். பாட்னாவில் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது;
ஹரியானாவில் இத்தகைய ஒரு சூழல் வரும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் கூடத் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் காணப்படவில்லை.
அவசியம் இருப்பின், கூட்டணிக்கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் சைனி கூடக் கூறி இருந்தார். அவரின் உடல்மொழி கூட உறுதியுடன் இல்லை.
தேர்தல் முடிவு எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் தலைவர்கள் என்னதான் நினைத்தாலும் மக்கள் தான் முதலாளிகள்.இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.


