
புதுக்கோட்டை அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழியை வீரர்கள் அதிகாரிகள் பார்வையாளர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 800 காளைகள் களமிறக்கப்பட்டது. 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகளைக் கடைபிடித்தும் நடைபெற்று வருகிறது.
வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளைக் காளையர்கள் மல்லுக் கட்டி திமிலை தழுவி வருகின்றனர். இந்த ஜல்லிகட்டில் சிறந்த முறையில் காளையை அடக்கிய காளையர்களுக்கும் சிறந்த முறையில் களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், மின்விசிறிகள், காட்பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டில் ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.


