
கொட்டன்குளக்கரா பகவதி அம்மனின் புகழை போற்றுவதற்காகவும், இதன் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கோவிலில் நம்பிக்கையுடன் வேண்டிக் கொண்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து, அவர்களின் துயரங்களை அம்மன் போக்கிடுவாள் என்பது நம்பிக்கை.
கொட்டன்குளக்கரா தேவி கோவில் :
கேரளாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வினோத வழிபாட்டு முறைகள் கொண்ட கோவில்களில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்த கொட்டன்குளக்கரா தேவி கோவிலும் ஒன்று. இங்குப் பகவதி அம்மன், கொட்டன்குளக்கரா தேவி என்ற பெயரில் அழைப்படுகிறாள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறாள் கொட்டன்குளக்கரா தேவி.
அடர்ந்த மரங்கள் நிறைந்த, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது கொட்டன்குளக்கரா தேவி கோவில். குளத்தின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்குப் பகவதி அம்மன் சுயம்பு வடிவமாகக் காட்சி தருகிறாள்.
தல வரலாறு :
ஒருமுறை மாடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர், சாப்பிடுவதற்காகத் தங்களுக்கு கிடைத்த தேங்காய் ஒன்றை இப்பகுதியில் இருந்த கல் ஒன்றில் உடைத்துள்ளனர். உடனடியாக அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளிப்பட்டதால் பயந்து போன சிறுவர்கள் ஊர் பெரியவர்களிடம் சொல்லி உள்ளனர். இது தொடர்பாகப் பிரசன்னம் பார்த்தபோது, அது தெய்வீக சக்தி படைத்த கல் என்றும், வனத்துர்க்கை இங்குக் கோவில் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளார். அதற்குப் பிறகு இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் அங்கிருந்த தென்னை ஓலை, இலை, தளைகளைக் கொண்டு சிறிதாகக் கோவில் போன்று அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
அப்பகுதியில் கிடைக்கும் மலர்களைக் கொண்டு, தினமும் விளக்கேற்றி இப்பகுதி பெண்கள் வழிபட்டு வந்துள்ளனர். ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே இக்கோவிலில் வழிபட்டு வந்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மாடு மேய்க்கும் சிறுவர்கள், தாங்களும் பெண்களைப் போன்று வழிபட்டு வேடமிட்டு பூஜைகள் செய்து, அம்மனை வழிபட்டு வந்துள்ளனர். அவர்கள் தேங்காய் துருவலிலிருந்து பெறப்பட்ட பால் போன்ற பானத்தை அம்பாளுக்கு படைத்துள்ளனர். மேலும் தேங்காய் எண்ணெய்யை காய்ச்சி, அதிலிருந்து எண்ணெய்யை பிரித்தபிறகு கிடைக்கும் படிவத்தையும் அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைத்துள்ளனர்.
மார்ச் மாத திருவிழா :
கொட்டன் நைவேத்தியமாகப் படைக்கப்படும் குளக்கரையில் அமைந்த அம்மன் கோவில் என்பதால் கொட்டன்குளக்கரா தேவி கோவில் என இக்கோவில் அழைக்கப்படுகிறது. சிறுவர்கள் துவங்கி வைத்த பூஜை, வழிபாடுகள் காலம் காலமாகத் தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இக்கோவிலில் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தக் கோவில் வாசலில் அமைந்துள்ள கோவிலுக்குப் பூதகுளம் என்று பெயர். இந்தக் கோவில் தற்போது பெரிதாகக் கட்டப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்லும் கோவிலாக உள்ளது.
வேண்டுதல்கள் :
இக்கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் பக்தர்கள் வேண்டியதை அருள் கண் கண்ட தெய்வமாக விளங்குகிறாள். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து, அவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வமாக இவள் விளங்குகிறார். செல்வ வளம் பெருக, தொழில் சிறக்க, குழந்தை பேறு கிடைக்க போன்ற வேண்டுதல்களுக்காகவே இக்கோவிலில் அதிகமானவர்கள் வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.
திருவிழாக்கள் :
சமயவிளக்கு, குருத்தால பந்தல், ஜீவத எழுநல்லது ஆகிய மூன்று விழாக்கள் ஆண்டுதோறும் இக்கோவில் பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளது.
சமயவிளக்கு – சமயவிளக்கு திருவிழா அல்லது கொட்டன்குளக்கரா திருவிழா அல்லது கொட்டன்குளக்கரா சமயவிளக்கு திருவிழாவின்போது ஏராளமான ஆண்கள் பெண்களைப் போல் வேடமணிந்து, விளக்கேந்தி, ஊர்வலமாகச் சென்று பாரம்பரிய முறையில் பூஜை செய்து வழிபடுவார்கள். அம்மனின் அருளை பெறுவதற்காகப் பக்தர்கள் இவ்வாறு வழிபடுகின்றனர்.
குருத்தோலை பந்தல் – இக்கோவிலின் புராணம் மற்றும் தோற்றத்தை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலத்தில் இக்கோவில் எப்படி இருந்ததோ அதன் மாதிரி ஆண்டுதோறும் கட்டப்படுகிறது. இந்தத் திருவிழாவிற்கு குருத்தோலை பந்தல் என்று பெயர். இந்தச் சமயத்தில் யானைமீது பவனி வரும் அம்மனின் ஊர்வலத்தைக் காண குஞ்சலும்ம் உண்டு துவங்கி ஆராட்டுகடவு வரை நீண்வ வரிசையில் பக்தர்கள் காத்திருப்பார்கள். இந்த ஊர்வலத்தைக் கண்டால் மன அமைதி, வளமான வாழ்க்கை கிடைக்கும், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
கொட்டன்குளக்கரா தேவி கோவில் விபரம் :
ஜீவத எழுநல்லது – இந்தத் திருவிழா பெரும்பாலும் கேரளாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நடத்தப்படும். இந்த விழாவின்போது கேரள பெண்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய நடனமாடி அம்மனை வழிபடுவார்கள்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இருவு 08.30 வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காகக் கோவில் திறந்திருக்கும்.
கோவில் முகவரி :
ஸ்ரீ கொட்டகுளக்கரா தேவி கோவில்,
கொட்டன்குளக்கரா, சவரா,
கொல்லம், கேரளா – 691 583.




