
கோடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்…
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தாலும் கோடநாடு சம்பவத்தை மட்டும் திட்டமிட்டு பேசுகின்றனர்.
கோடநாடு விவகாரத்தில் சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்காதது ஏன்? காவிரி விவகாரத்தில் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அதிமுக முடக்கியது.90 சதவீத வழக்கு விசாரணை முடிந்த நிலையில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன்? கோடநாடு சம்பவ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானது திமுக வக்கீல்கள் தான். கோடநாடு வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்தது அதிமுக. அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தது திமுக. பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா? திமுக கூடப் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே? தமிழகத்தின் பிரச்சனைக்காக மத்திய அரசிடம் அதிமுக எப்போதும் எடுத்துரைக்கும். இவ்வாறு கூறினார்.
மேலும் அதிமுக ஊழல்பற்றிப் பைல்ஸ் வெளியிடப்படும் என்று பாஜக மாவட்டத்தலைவர் கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “யார் வேண்டுமானாலும் எங்களுக்கு எதிராக என்ன பைல்ஸ் வேண்டுமானாலும் வெளியிடட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை” என்று கூறினார்.



