Kil Pennathur: துணை சபாநாயகரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

Advertisements

பகுதி நேர நியாய விலை கடையைத் திறக்காமல் காலம் தாழ்த்தி தற்போது வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி  வரும் வழியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேல்பாலானந்தல் பகுதியில் மேல்பாலானந்தல், கொட்டாமேடு, பால்பேட்டை பலாப்பாக்கம், பாரதிபுரம் ஆகிய பகுதிகளை இணைத்து நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடையிலிருந்து 500 குடும்ப அட்டைகளைத் தனியாகப் பிரித்து மேல்பாலானந்தல் பகுதியில் உள்ள குளத்து மேட்டின் அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பகுதி நேர நியாய விலைக் கடையை அமைக்க உத்தரவு வழங்கினார்.

இந்தப் பகுதி நேர நியாய விலை  கடையைக் கடந்த 29-ஆம் தேதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைப்பதாக இருந்தது, பின்னர் தேதி மாற்றப்பட்டு நான்காம் தேதி திறப்பாதாக இருந்த நிலையில் அன்றும் நியாய விலை கடையைத் திறப்பு ரத்து செய்யப்பட்டு குளத்து மேட்டில் அமைய இருந்த கடையை மூன்று கிலோமீட்டர் தாண்டிக் கொட்டா மேடு என்ற இடத்திற்கு கடையை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று மங்கலம் பகுதியில் பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு  துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வர இருந்த நிலையில் நியாய விலை கடையை வேறு பகுதிக்கு மாற்றுவதை  கண்டித்து அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை – மங்கலம் சாலையில் உள்ள மேல்பாலானந்தல் கூட்டுச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மங்கலம்- திருவண்ணாமலை சாலையில் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *