
KC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
Congress News Tamil : காங்கிரஸ் தலைவர்கள் பெகாசஸ் தொழில்நுட்பம்மூலம் உளவு பார்க்கப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஆதாரத்துடன் ஆழப்புழா எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வைத்திருக்கும் ஐபோன் உளவு பார்க்கப்படுவதாக ஐபோன் நிறுவனம் அனுப்பியிருக்கும் செய்தியை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார் அவர். இது அப்பட்டமான விதிமீறல் மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், ” உங்களுக்குப் பிடித்த தீங்கிழைக்கும் ஸ்பைவேரை எனது போனுக்கும் அனுப்பியமைக்கு நன்றி பிரதமர் மோடி ஜி. உங்களின் இந்தச் சிறப்புப் பரிசைப் பற்றி என்னிடம் ஆப்பிள் தெரிவித்துவிட்டது. இதன்மூலம் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், பிரதமர் மோடி அரசு கிரிமினல் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான முறையில் செயல்படுகிறது. அரசியல் எதிரிகளின் பின்னால் சென்று அவர்களின் தனியுரிமையை இந்த முறையில் ஆக்கிரமிக்கிறது.” எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவை தேர்தலில் மக்கள் கொடுத்த செய்தி என்னவென்றால், அரசியலமைப்பு மற்றும் பாஜகவின் பாசிச செயல்திட்டங்களை நிராகரிக்கிறோம் என்பது தான் என்றும் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடந்து முடிந்த ஒருசில மாதங்களிலேயே பெகாசஸ் உளவு விவகாரம் மீண்டும் தலைதூக்க இருப்பது அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களை மத்திய அரசு பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதாகச் செய்தி வெளியானது. இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருக்கும் நிலையில், கேசி வேணுகோபால் வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் இந்த விவாகரம் மீண்டும் பூதாகரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் நிறுவனம் கேசி வேணுகோபால் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாகும் போன்கள் குறித்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் யூசர்களுக்கும் ஐபோன் இதே போன்ற செய்தியை அனுப்பியிருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாட்டிலும் உளவு பார்க்கப்படும் நபர்களுக்கு ஐபோன் நிறுவனம் இந்த எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. மேலும், ஐபோன் யூசர்களின் தனியுரிமை விவகாரத்தில் நிறுவனம் எந்தவொரு சமரசத்தையும் செய்து கொள்ளாது என்றும் விளக்கமளித்துள்ளது.


