
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என, டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டத்தில், கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. தற்போதிருக்கும் தண்ணீர் தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது என்பதால், தமிழ்நாட்டிற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் தர வாய்ப்பில்லை என பிடிவாதம் காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் நேரில் பங்கேற்கவில்லை.
மாறாக கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் செயலாளர் கவுரவ்-குப்தா, காணொளி வாயிலாக பங்கேற்றார். தமிழ்நாடு தரப்பில் சுப்ரியாசாகு, சுப்ரமணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்க வேண்டிய நிலுவை நீரை, உடனடியாகத் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


