
கரூரில், குறுகிய அளவிலான கடைவீதி பகுதியில் விரைவாகச் செல்லும் மணல் லாரிகளை மாற்றுப்பாதையில் செல்ல வலியுறுத்திக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…
கரூர் அடுத்த வாங்கல் காவிரி ஆற்று பகுதியில் மணலை சேகரித்து அருகில் உள்ள பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் கட்டுமான பணிக்கு மாட்டுவண்டிகளிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் லாரிகளுக்கும் மணல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆற்றிலிருந்து மணலை சேகரித்து வரும் லாரிகள் வாங்கல் கடைவீதி பகுதியில் உள்ள குறுகிய சாலையில் வேகமாக இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், வேகமாகச் செல்லும் லாரியிலிருந்து சிதறும் மணல் துகள்களால் கடைவீதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் கூறி லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்க வலியுறுத்தி வியாபாரிகள் சார்பில் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஆனால் அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்கள் போராட்டத்தை நடத்தினர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 15 நாட்களுக்குள்ளாக மாற்றுப்பாதையில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வியாபாரிகள் சங்க தலைவர் சிவா, கடந்த ஆறு மாதங்களாக அதிகப்படியான மணல் லாரிகள் கடைவீதி பகுதியில் இயக்கப்படுவதால் அச்சமாக உள்ளது.
இதுவரை சிறிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு விபத்துக்கள் ஏற்படும் முன்னே அதனைத் தடுக்க வேண்டும். மணல்கள் சிதறி கொண்டே செல்வதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அதிகாரிகள் 15 நாட்களுக்குள் மாற்று பாதையில் லாரிகளை இயக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆயினும் திட்டமிட்டபடி இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்றார். வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வாங்கல் கடைவீதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.


