
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும், மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்பட பலரும் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். வீட்டின் உள்ளே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பணியாற்றும் காவலாளிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



