
வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாகச் சேலை கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கண்ணகி நகர், 54வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம், மகாலட்சுமி தம்பதி. இவர்களது இளைய மகன் செல்வா(வயது 12). தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் வீட்டில் குழந்தைகள் உறங்குவதற்காகக் கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டித் தொங்க விட்டுள்ளனர்.
வீட்டில் வேலாயுதம் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மகாலட்சுமி தனது மூத்த மகனுடன் வெளியில் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் சிறுவன் செல்வா சுற்றி விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாகப் புடவை கழுத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் செல்வா சுயநினைவின்றி இருப்பதை அண்ட அவரது உறவினர் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
விபத்துகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகி நகர் காவல் துறையினர் செல்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


