
தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், இன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் 10 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தங்கச்சிமடம், ஆலங்குடி, மூலைக்கரைப்பட்டி, கழுகுமலை ஆகிய இடங்களில் 8 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் கடும் வெப்பம் நிலவியது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் நாகர்கோவில், செட்டிக்குளம், ராமன்புதூர், தோட்டியோடு, சுங்கான்கடை, வில்லுக்குறி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



