
மனைவியுடனான கள்ளத்தொடர்வை கண்டித்த கணவனைக் கட்டையால் அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது தம்பியைத் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (35). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராகப் பணியாற்றி வந்தார். ரவியின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். இவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நண்பன் மணிகண்டனை ரவி அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், மணிமேகலைக்கும் மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரவி இல்லாத நேரத்தில் மணிகண்டன் அடிக்கடி வீட்டுக்கு வந்து மணிமேகலையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ரவிக்கு தெரியவந்ததை அடுத்து அவரது நண்பனை எச்சரித்துள்ளார். ஆனால், இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மணிகண்டன் நடத்திவரும் பானிபூரி கடைக்குச் சென்ற ரவி, என் மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் எனக்கூறி அவருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது தம்பி கோபி ஆகியோர் சேர்ந்து, அங்குக் கிடந்த பெரிய கட்டையால் ரவியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளி மணிகண்டனை கைது அவரது தம்பி கோபியை தேடி வருகின்றனர்.

