
சென்னை: ‘பா.ஜ., தலைமை முடிவெடுத்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். அதில் எனக்குத் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை’ எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைப் பா.ஜ., தலைமை இன்று அல்லது இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவை அல்லது கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவாரெனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இந்தத் தகவல் எங்கிருந்து, யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. பா.ஜ., வைப்பொறுத்தவரை எந்தப் பணியைக் கொடுக்கிறார்களோ, அதைச் செய்கிறேன்.
ஒருவேளை கட்சி தலைமை லோக்சபா தேர்தலில் போட்டியிட சொன்னாலும் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. நான் கட்சியிடம் எதையும் கேட்கவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ., தலைமை யாரை நிறுத்தப்போகிறார்கள் எனத் தெரியாது. கட்சி வளர்ந்துள்ளது என்பது லோக்சபா தேர்தல் முடிவுகளில் தெரியும்.
மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு உதயநிதி சமம் கிடையாது. அவருடைய அப்பா, தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்து எம்எல்ஏ, அமைச்சரானார். இவ்வாறு அவர் கூறினார்.

