கனடாவில் அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி – ஜஸ்டின் ட்ரூடோ !

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார். முனனதாகக் கனடா, சீனா பொருட்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

இவரது அறிவிப்பைத் தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

30 பில்லியன் கனேடிய டாலர்களில் உள்ளவை வருகிற செவ்வாய் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதே தினத்தன்று, டிரம்பின் வரிகள் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மீதான வரிகள் 21 நாட்களில் அமலுக்கு வரும் என்று ட்ரூடோ கூறினார்.

ட்ரூடோவின் அறிவிப்பு, கனடா மற்றும் மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25% வரிகளும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரிகளும் விதிக்க டிரம்ப் உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வந்துள்ளது.

இது உலகளாவிய வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கும். மேலும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவிருக்கும் வாரங்கள் கனேடிய மக்களுக்குக் கடினமாக இருக்கும் என்றும், ட்ரூடோவின் வரிகள் அமெரிக்கர்களையும் பாதிக்கும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

அமெரிக்க பீர், ஒயின் மற்றும் போர்பன், அத்துடன் டிரம்பின் சொந்த மாநிலமான புளோரிடாவிலிருந்து வரும் ஆரஞ்சு சாறு உள்ளிட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்று வரி விதிக்கப்படும் என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

ஆடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள்மீதும் கனடா வரி விதிக்கும் என்று தெரிகிறது.

கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் இருப்பதை விடக் கனேடிய பொருட்களை வாங்கி வீட்டிலேயே ஓய்வெடுக்க ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *