
நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்து திருப்பூர் மாவட்ட எஸ்பி சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு. இவர் கடந்த சில ஆண்டுகளாக நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் இவரது வீட்டையும் நேச பிரபுவின் நடமாட்டத்தையும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை முதலே வெளி ஆட்களின் நடமாட்டம் அதிகரித்ததால் சந்தேகம் அடைந்த நேச பிரபு இரவு காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய போலீசாரையும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டு தன்னை நோட்டமிட்டு வரும் நபர்களால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பைக் மற்றும் கார்களில் தன்னை நெருங்கி வருவதாகவும் அவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் காவலர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். நேச பிரபு பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு கும்பல் தன்னை நெருங்கி விட்டதாகவும், தன்னைத் தாக்க துவங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது எதிர்காலமே முடிந்தது எனக் கூறி கடைசியாக பேசிய ஆடியோவுடன் கே கிருஷ்ணாபுரம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளார். அப்போது, அலறல் சத்தமும் அந்த ஆடியோவில் கேட்கிறது. இருப்பினும் விரட்டிச் சென்றபோது மர்ம கும்பல் நேச பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த நேச பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டு வர, மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் அங்கிருந்தவர்கள் நேச பிரபுவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு நேச பிரபுவை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இச்சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணையை துவக்கியுள்ளனர். மேலும் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த சூழலில், நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்து திருப்பூர் மாவட்ட எஸ்பி சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.


