
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை புறக்கணித்துவிட்டு, புதியவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது என்றும் நேர்மையோடும், வெளிப்படைத் தன்மையோடும் கட்சியை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.



