
தலைநகர் சென்னையில் இருந்து ஜோசப் விஜய் கேபினட்டில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றுளனர். எனினும், கொளத்தூரில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்த ‘ஜெயண்ட் கில்லர்’ விஎஸ் பாபு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..இது பற்றிய பின்னணி தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் சென்னை மாவட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினையே வீழ்த்திய வி.எஸ். பாபுவுக்கு இடமளிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய முகங்கள் மற்றும் தேர்தல் களத்தில் வலுவான வெற்றியைப் பதிவு செய்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது
அந்த வகையில் , என். ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா , பி. வெங்கடரமணன், ராஜ்மோகன் ஆகியோருக்கு அமைச்சரைவையில் பொறுப்புகள் வழங்கப்பட்டுருக்கு..
ஆனால் , இந்த தேர்தலின் மிகப்பெரிய சாதனையாளர் என்று பார்க்கப்பட்டவர் வி.எஸ். பாபு. இவர் , கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர். முன்னாள் முதல்வர் ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு கண்டிப்பான முறையில் அமைச்சரவையில் ஒரு முக்கியமான துறை ஒதுக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று வெளியாகியுள்ள 9 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
ஸ்டாலினையே வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா? என்ற கேள்வியோடு வி.எஸ். பாபு அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. கட்சி மேலிடம் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்பு ஏதேனும் வழங்கப்படலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே நேரத்தில், கட்சியின் சமூக மற்றும் மண்டல சமநிலையை கருத்தில் கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால் விஎஸ் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் அமைச்சரவையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவை காணப்படுகிறது. கே.ஏ. செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களான நிர்மல் குமார், டிகே பிரபு, கீர்த்தனா போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தாலும், கொளத்தூரில் சரித்திரம் படைத்த வி.எஸ். பாபுவின் புறக்கணிப்பு, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு இடையே ஒரு விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.
மேலும், விஜய்யின் அரசியல் நகர்வுகள் மிகவும் அமைதியாக இருப்பதால், இந்த ‘ஜெயன்ட் கில்லர்’ விவகாரத்தில் தவெக தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….



