Money Laundering Case – V. Senthil Balaji: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Advertisements

அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்தக் குற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தனக்கு எதிராகச் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்துச் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பிபில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி மற்றும் எஸ்.பிரபாகரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர் அப்போது, மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன்பு அமலாக்கத் துறை வழக்கு விசாரணையைத் தொடங்க முடியாது. அமலாக்க த்துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும்” என்று வாதிட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்தனர். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை ஏப்.25-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *