
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவிய நிலையில், வரும் நாள்களில் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளை அழிக்க இஸ்ரேல் முடிவு செய்தது. ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி தளங்கள், ஏவுகணைத் தயாரிப்புத் தளங்கள், மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு பதிலடியாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் போா்க் கப்பல் இஸ்ரேலுக்கு உதவியதாக கூறப்படுகிறது.
ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் மீது ஈரான் தொடா்ந்து ஏவுகணைகளை ஏவினால் டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்தாா்.பலிஸ்டிக் ஏவுகணைகளும் இஸ்ரேலை அழிப்பதற்கான ஈரானின் மற்றொரு ஆயுதமாக உள்ளது.
இதுவரை 20 ஈரான் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் வீரா்கள் 7 போ் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.



