
6-வது நாளாக நீடிக்கும்போர், பொதுமக்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர் 6-வது நாளாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு தரை வழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயராகி வருகிறது.

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவிக் கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இரு தரப்புக்கு இடையேயான போர் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது.

இந்தப் போரில் இரு தரப்பிலும் சேர்த்து கிட்டதட்ட 3,600 பலியாகியுள்ளனர். போரினால் காசா முனையிலிருந்து மட்டும் சுமார் 3,38,000 பேர் தங்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


