
புதுடில்லி: பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க, கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவில், ‛‛ பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளியென கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், பொன்முடி தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டும் எம்.எல்.ஏ., வான பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, கடந்த 13ம் தேதி கவர்னர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என, முதல்வருக்குக் கவர்னர் கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க, கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவில், ‛‛பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


