
ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து, இரு வாரங்களில் முடிவு செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சு கடந்த வாரம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி, எதிர்பாராத தாக்குதலை துவங்கியது. இதில் அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை மையங்கள் சேதமாகின. முக்கிய தளபதிகள் பலர் துல்லிய தாக்குதலுக்கு பலியாகினர். ஈரானும் பதில் தாக்கி வருகிறது. கடந்த எட்டு நாட்களாக நடக்கும் சண்டையில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஜெருசலேம், ரமாத் கன், ஹைபா, பெஹர்ஷெபா ஆகியவை கடும் சேதமடைந்தன. மேலும், குடியிருப்புகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமின்றி மிகப்பெரிய மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டது.
இதை போர் குற்றம் என கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பழிதீர்ப்போம் என கூறிய இஸ்ரேல் ராணுவம், ஈரானின் அராக் பகுதியில் உள்ள முக்கிய கனநீர் அணு உலையை தாக்கியது. இது மட்டுமின்றி நேற்று இஸ்ரேலின், 60 போர் விமானங்கள் ஈரான் எல்லைக்குள் நுழைந்து ஏவுகணை தயாரிப்பு ஆலைகள், ஈரானின் ராணுவ ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் மீது குண்டு வீசியது. இந்நிலையில், நேரடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிக்கை வெளியிட்டார், அதில், ‘அணுசக்தி திட்டம் குறித்து பேசுவதற்கு கணிசமான வாய்ப்பு இருப்பதால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில், அமெரிக்க ராணுவம் நேரடியாக ஈடுபடுமா என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வதாக கூறியுள்ளார்.



