
உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 விழுக்காடு இந்தியாவில் உள்ளது என்பதில் பெருமிதம் கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகப் புலிகள் நாளையொட்டி வன உயிரின ஆர்வலர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கையில் 70 விழுக்காட்டை இந்தியா கொண்டிருப்பதில் இந்தியர்கள் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையோடு இயைந்து வாழும் நம் மக்களின் எண்ணமே புலிகளைக் காக்கும் நமது முயற்சிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீடித்த வளர்ச்சி, பொதுமக்கள் பங்களிப்பு ஆகியன புலிகள் காப்பை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது காட்டு அலுவலர்கள், அறிவியலாளர்கள், காப்பாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பும் முயற்சிகளும் புலிகள் காப்பில் குறிப்பிடத் தக்க பங்காற்றுவதாகத் தெரிவித்துள்ளார். மலைவாழ் மக்களுக்கு அதிகாரமளிக்கவும், மனிதர்கள் – விலங்கினங்கள் இடையிலான தகராறுகளைக் குறைக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


