
இந்தியாவில் உள்ள விமானப்படைத் தளங்களைக் குறிவைத்துப் பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்களை ஏவியதாகவும், அவற்றை இந்தியப் படைகள் முறியடித்ததாகவும் கர்னல் சோபியா குரேசி தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலை முறியடித்த இந்திய படைகள் உடனடியாகப் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் பாகிஸ்தானில் ரபீக், மூரித், சக்லாலா, ரகீம் யார் கான், சுக்கூர், சூனியன் ஆகிய ராணுவத் தளங்கள் மீது குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்கள், ராடார் நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியன தாக்கி அழிக்கப்பட்டதாக சோபியா குரேசி குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் சியால்கோட் விமானப்படைத்தளம், பஸ்ரூர் ராடார் நிலையம் ஆகியன ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்டதாக சோபியா குரேசி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், அவந்திப்பூர், உத்தம்பூர் ஆகிய இடங்களில் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் குறிவைத்துப் பாகிஸ்தான் படைகள் தாக்கியுள்ளதாகவும் சோபியா குரேசி குற்றஞ்சாட்டினார்.
