
ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துச் செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விரைவாக விசாரித்துப் புதிய உத்தரவு பிறப்பிக்கத் தனி நீதிபதி ஆஷாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்குத் தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் மதம், பாதுகாப்புப் படை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இதை மறு ஆய்வுக்குழுப் பரிசீலனைக்குப் பரிந்துரைத்தனர்.
இதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, மறு ஆய்வுக் குழுப் பரிசீலனைக்குப் பரிந்துரைத்தது செல்லாது என்றும், படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துச் செய்துள்ளனர். உரிய விளக்கம் அளிக்கத் தணிக்கை வாரியத்துக்குப் போதிய அவகாசம் வழங்கவில்லை என்றும், படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும் வகையில் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்துப் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ஆஷாவுக்கு உத்தரவிட்டனர்.


