
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 8 ஆவது நாளை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 450 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயிரம் டிரோன்களை ஈரான் ஏவிய நிலையில், அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் இடைமறித்து அழித்துள்ளது. அதைத்தொடர்ந்து தாக்குதல் உத்தியை மாற்றியுள்ள ஈரான் இதுவரை பயன்படுத்தாத ஹைபர்சோனிக் ஏவுகணைகளை களமிறக்கியுள்ளது.
ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் மணிக்கு 6500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஃபத்தா-1 ஹைபர்சோனிக் ஏவுகணை மற்றும் செஜ்ஜில் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை ஈரான் திணறடித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் ஈரானின் நடான்ஸ் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட வெறும் 7 நிமிடத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை தாக்கும் திறன் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் காற்றில் இருக்கும்போது அவற்றின் பாதையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளதோடு, மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்வதால் அவை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவலாக அமைந்துள்ளது. குறிப்பாக ஈரான் நேற்று வீசிய ஏவுகணையில் ஒன்று பல வெடிகுண்டுகளுடன் கூடிய ஏவுகணை என்று தெரிகிறது. இந்த ஏவுகணை விழும் நேரத்தில் பல்வேறு பாகங்களாக பிரிந்து விழுந்ததாகவும், அவற்றை தொட்டால் வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தெற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சொரோகா மருத்துவமனை கட்டடம் பலத்த சேதமடைந்தது. இதில், 47 பேர் காயமடைந்தனர். ல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டடம் தாக்குதலுக்கு உள்ளானது. இதேபோன்று டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. இதெல்லாம் இஸ்ரேலுக்கு புதிது என்பதால் பதற்றம் நிலவுகிறது.


