
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் குலுங்கியதால் பதற்றம் நிலவி வருகிறது.
இதேபோன்று கடந்த வாரமும் அப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பேரிழப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து 6.3, 5.9, 5.5 என ரிக்டர் அளவுகளில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி தரைமட்டமானது. அதில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததால் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியானதாக ஐநாவின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நிவாரணம் வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான ஹெராட்டின் வடமேற்கே 30 கிமீ தொலைவில் சமீபத்திய நிலநடுக்கத்தின் மையம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிக நில அதிர்வு மண்டலத்தில் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது. அந்த பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வெண் மற்றும் தீவிரத்தை சமாளிக்க சரியான வீடு கட்டமைப்பு, வாழ்விட சூழியல் உள்ளிட்டவற்றை அமைப்பது அவசியமாகிறது.



