
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 விழுக்காடு நேர்மையாக நடைபெற்றுள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 விழுக்காடு நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறுகிறது என்றும், தகுதியானவர் மட்டுமே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் யாராவது பணம் பெற்றால் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் என்பது ஆறு மாத காலத்திற்கானது மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர் எந்த நோக்கத்தில் ஆய்வு செய்துள்ளார் எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். தி.மு.க. ஆட்சியில் கட்சி விழாக்களுக்கு அரசு பள்ளி மேஜை, நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன என்று குற்றம் சாட்டினார்.



