
ஆப்கானிஸ்தானில் தோண்ட தோண்ட சடலங்கள்.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,400 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 9240 பேர் படுகாயமடைந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தது. அங்குத் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெராட் நகருக்கு வட மேற்கே 40 கிமீ தொலைவில் இது மையம் கொண்டிருந்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆகப் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 மற்றும் 5.5 எனப் பதிவாகியது எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 20 வருடங்களில் நடந்திராத மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.3 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400-ஐ தாண்டி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களில் பலர் உயிருக்குப் போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாக ஜன்னன் சயீக் தெரிவிக்கையில், “இதுவரை 2,445 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 9,240 பேர் இதில் காயமடைந்து உள்ளார்கள். இந்த நிலநடுக்கம் காரணமாக 1,320 வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும் இருக்கின்றன.” என்று கூறி உள்ளார்.


