
மாற்றம் வேண்டி மக்கள் வாக்களித்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் மாநகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோரன் மம்தானி தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் மீரா நாயருக்கும் உகாண்டாவின் முகமது மம்தானிக்கும் பிறந்த மகன் சோரன் மம்தானி. 34 வயதான சோரன் மம்தானி அமெரிக்காவின் நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்துக் குடியரசுக் கட்சி சார்பில் கர்ட்டிஸ் சிலிவா போட்டியிட்டார். நியூயார்க் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ சுயேச்சையாகப் போட்டியிட்டார். மேயர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இவர்களில் சோரன் மம்தானி பத்து இலட்சத்து 36 ஆயிரத்து 51 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.
சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கூமோ 8 இலட்சத்து 54 ஆயிரத்து 995 வாக்குகளைப் பெற்றார். குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்ட்டிஸ் சிலிவா ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 137 வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50 விழுக்காட்டைப் பெற்ற சோரன் மம்தானி நியூயார்க் மாநகரின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெற்றிபெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்ப ஆட்சி முறையை மாற்றியுள்ளதாகவும், மாற்றம் கருதியே மக்கள் தனக்கு வாக்களித்துள்ளதாகவும் கூறினார். வரலாற்றில் அரிதாக ஒரு நிகழ்வு வரும்போது நாம் முந்தைய நிலையில் இருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்க வேண்டும் என்று ஜவகர்லால் நேரு கூறியதை மேற்கோள் காட்டி சோரன் மம்தானி பேசினார்.



