
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என, திமுக அரசை வலியுறுத்துவதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



