குரூப்-4 பணி நியமன கவுன்சிலிங் இன்று துவங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Advertisements

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A, குரூப்-1 ஆகிய பிரிவுகளில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.

2022-ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.

இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 10,117-ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியானது. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் கட்டமாக குரூப் 4 தொகுதியில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கவுன்சிலிங்கில், வி.ஏ.ஓ. என்ற கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 425 இடங்கள்;இளநிலை உதவியாளர் பணியில், 5,321; வரி வசூலிப்பாளர், 69; கள உதவியாளர், 20 மற்றும் கிடங்கு காப்பாளர் 1 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதையடுத்து, 3,377 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கு, நியமன கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *