
வாக்குத் திருட்டின் மூலம் ஜனநாயகத்தை அழிப்போரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதை மெய்ப்பிக்க வேண்டிய தகவல்களைத் தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களிடமே தான் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
வாக்குத் திருட்டை வெளிப்படுத்தும் தனது முயற்சியை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். வாக்காளர்களின் பெயரைப் பட்டியலில் இருந்து நீக்கியதும், போலி வாக்காளர்களைச் சேர்த்ததும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்குத் தெரியும் என்றும், அவர் வாக்குத் திருடர்களைப் பாதுகாப்பதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சியினருக்கு வாக்களிக்கும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பற்றித் தான் பலமுறை கேள்விப்பட்டுள்ளதாகவும், இப்போது அதற்கான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
கர்நாடகத்தின் பல தொகுதிகளில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சில தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாகக் கர்நாடகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 18 கடிதங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளதாகக் கூறிய ராகுல்காந்தி, அந்தக் கடிதங்களை வெளியிடத் தேர்தல் ஆணையம் தயாரா? என்றும் வினவியுள்ளார்.


