
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைக்கும் என்றும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்போம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்று விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் மத்திய பாஜக அரசும், மாநில திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.



