Robert Vadra:கங்கனா ரனாவத் பாராளுமன்றத்திற்கு தகுதியற்றவர்!

கங்கனா ரனாவத் பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்-அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இது குறித்து இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., கங்கனா ரனாவத் சமீபத்தில் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்காள தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், கங்கனா ரனாவத் பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“அவர் (ரனாவத்) ஒரு பெண். நான் அவரை மதிக்கிறேன். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் என்று நான் உணர்கிறேன். படித்தவர் இல்லை. கல்வியறிவு பெறவில்லை, மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்று நான் உணர்கிறேன். அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அவர் பெண்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முழு நாடும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்றார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமான பிரச்சனை என்று குறிப்பிட்ட வதேரா, அதற்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *