
உலகக்கோப்பையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதைத் தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்…
சென்னை: 10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதிவரை நடக்கிறது. இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை பல்வேறு நாடுகளில் பயணித்து வருகிறது.
இந்த உலகக்கோப்பை இலங்கையிலிருந்து விமானம்மூலம் நேற்று சென்னை வந்தடைந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் அரங்கில் உலகக்கோப்பைக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ, உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, உதவி தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோப்பையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த உலகக்கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்படுகிறது. அதன் பிறகு பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் உலகக்கோப்பையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
#INDIA will win! #CWC2023 pic.twitter.com/cbzpM651zl
— M.K.Stalin (@mkstalin) September 16, 2023



