
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது! சென்னை உயர்நீதிமன்றம்…
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, “50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள்” பெற்று அதை ஜனாதிபதிக்கு அனுப்பும் திட்டத்தை தி.மு.க., அண்மையில் துவங்கியது. இந்த திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில் கையெழுத்திடுமாறு பள்ளி மாணவர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று(நவ.,02) விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்?.
நீட் விஷயத்தில் மத்திய அரசின் முடிவு மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். இதுபோல பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது. இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வழக்கறிஞர் எம்.எல்.ரவி வாபஸ் பெற்றதால், மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.


