
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்துக் கக்கிய சாம்பலும் புகையும் வானில் மூண்டுள்ளதன் காரணமாகப் பல்வேறு வழித்தடங்களுக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை வெடித்துப் பாறைக் குழம்பைக் கக்கி வருகிறது. எரிமலை வாயில் இருந்து வெளியேறும் புகையும் சாம்பலும் வானில் 14 கிலோமீட்டர் உயரத்துக்கு எழுந்து சூழ்ந்துள்ளன.
காற்று கிழக்கு நோக்கி வீசுவதால் புகை மூட்டம் செங்கடல் வழியாக ஏமன் ஓமன் நாடுகளுக்கும் அரபிக்கடலைத் தாண்டி இந்தியாவின் மேற்கு வடமேற்குப் பகுதிகளுக்கும் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் இந்தப் புகைமூட்டம் இந்தியாவைவிட்டு நீங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எரிமலைப் புகைமூட்டத்தால் ஏர் இந்தியா, ஆகாச ஏர், இண்டிகோ, கேஎல்எம் உள்ளிட்ட பல விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல இடங்களுக்கான தங்கள் சேவைகளை ரத்துச் செய்துள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் இன்று சென்னை – மும்பை, ஐதராபாத் – தில்லி, மும்பை – ஐதராபாத், மும்பை – கொல்கத்தா இடையான விமானங்களை ரத்துச்செய்துள்ளது.


