
சென்னை: தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாகத் திமுக அரசு மாற்றியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசுக்குக் கண்டனம். போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
போதைப் பொருள் தொடர்பாக 29 நாட்களில் 402 பேர் கைது செய்யப்பட்டதாகப் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த 402 பேர் சுதந்திரமாகப் போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்? இந்த வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்காத இந்தத் திமுக அரசு இனியாவது தூக்கத்திலிருந்து விழித்துத் தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக., விற்கு வரும் பார்லிமென்ட் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


