
பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தனது எட்டு வயது வளர்ப்பு மகளைச் சித்தி கழுத்தை நெரித்துக் கொன்று உடலைச் சாக்குப்பையில் மறைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் தும்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயா போஜ்பூர் பகுதியில் உள்ள வீட்டில் மரப்பெட்டிக்குள் இருந்த கோணி சாக்கில் சிறுமியின் எரிந்த உடல் எச்சங்களை நேற்று [சனிக்கிழமை] இரவு போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
நேற்று காலை முதலே சிறுமியைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாகப் பேட்டியளித்த பக்சார் காவல் கண்காணிப்பாளர் சுபம் ஆர்யா, முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் சித்தி குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தனது வளர்ப்பு மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு உடலைத் தீ வைத்துக் கொளுத்தியதாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், உடலைக் கோணி பையில் அடைத்து, மரப்பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
அவரின் வாக்குமூலம் மற்றும் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் அவரைக் கைது செய்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குற்றத்தைச் செய்ததற்கான காரணத்தை அவர் போலீசாரிடம் கூறவில்லை. சிறுமியின் தந்தை டெல்லியில் வேலை செய்து வருகிறார். சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.


