
தவெக தலைவர் விஜய் தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தவெக நிர்வாகிகள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த, தவெகவின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த அதிரச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய் தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறது என்று கூறினார்.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பிற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தினார்.


