
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத் தளத்தில் தண்டையார்பேட்டையில் இளைஞர் உயிர் பறிப்பு சம்பவம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் விஷ்ணுவை அடித்து உயிர் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் உயிர் பறிப்பது தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? என்று கேள்வி எழுப்பினார்.
நேற்று திருச்சியில் பேசிய முதலமைச்சர் தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார் என்று சூட்டி காட்டினார். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு என்று தெரிவித்தார். சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? என்று வினவினார்.
தான் வகிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் விஜய் என்று விமர்சித்தார். தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.




