
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பெதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 25 ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தேர்வில் புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் விளையாடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



