
திமுக ஆட்சியில் உலக மகளிர் தினத்தில் கூட நாமக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜக விழுங்கி விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வரும் நிலையில் அதிமுகவை எவராலும் விழுங்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்று பதிலளித்தார். எம்ஜிஆர் அழிக்க நினைத்த கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் அடைக்கலம் புகுந்துள்ளார் என்றும் அவர் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு போல மாறிவிடும் என்றும் விமர்சித்தார்.
அதிமுக அரசுக்கு இடையூறாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா ஆன்மா விரட்டிவிட்டது என்றும் குறிப்பிட்டார். அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம் ஆனால், திமுகவில் உள்ள தொண்டர்கள் உயர்ந்த பதவி, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் போதை நடமாட்டம் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும் என்றார். திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் உலக மகளிர் தினத்தில் கூட நாமக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.


